Friday 25 April 2008



'காதலுக்கு கண்ணில்லை...

காதலுக்கு கண்ணில்லை
காலமும் அதற்கு தடையில்லை
நாற்பது வயதில் நாய்க்குணமாம்
நான் ஏன் அதற்கு விதிவிலக்காம்?

பருவத்தின் கோளாறு கேட்டதுண்டு
பாவையர்க்கும் இது பொருந்தும் நன்று
பருவம் வந்த பாவையர் சிலரும்
பாதிரி என்னை அணுகியதுண்டு.

அப்போதெல்லாம் அமைதியிழந்தேன்
ஆயினும் என்னை அடக்கி வாழ்ந்தேன்
ஆண்டவர் அருளும் சேரப்பெற்றால்
அவனியில் நானும் வெற்றி கொள்வேன்.
1998

நாற்பது வயதை...

நாற்பது வயதை கடந்தாச்சு
நடுத்தர வயதை அடைஞ்சாச்சு
நல்லாயன் இயேசு போலின்னும்
நானாகவில்லை நாணுகின்றேன்.

பத்துடன் ஏழும் சேந்தாச்சு
பதினேழு வருடப்பணியாச்சு
பக்குவமடைந்த பாதிரியாக
பலரும் என்னை காணவில்லை!

பாதிரிஎல்லாம் பாராள வேண்டாம்
பங்கையாவது 'ஆண்டிட' வேண்டும்
'பக்குவம்' இதற்கு பலமாக வேண்டும்
பாசாங்கு ஒன்றே பக்குவமாம்.

பாசாங்கு செய்ய நானில்லை
'பக்குவம்' எனக்கும் தேவையில்லை
பரிகாசம் கூட பரவாயில்லை
பணிவுடன் நானும் வாழ்ந்திடுவேன்.

வேறு:
பணமும் பதவியும் அவர்க்கு வேண்டும்
பகிட்டுடன் நாளும் வாழ்ந்திட வேண்டும்
பாதிக்குமேலே பாதிரியார் எல்லாம்
பரவலாக விரும்புவதிதுவே!

படித்தால் மட்டும் போதாது
மேலை நாட்டில் படித்திடவேண்டும்
வெள்ளையர் இறையியல் ஏற்க வேண்டும்
வேறொரு இறையியல் கூடாது!
1993

தமிழுக்கே தலைமையிடம்...

தமிழுக்கே தலைமையிடம் -என்
தங்கைக்கோ தனி ஓரிடம்
தமிழுக்கு தரமறுத்த தனியிடத்தை
தங்கைக்கு தந்துவிட்டேன் நன்று.

தமிழ் பிறந்து தரணிஎலாம் தழைத்திருக்க
தங்கைமட்டும் ஏனின்னும் தழைக்கவில்லை?
அவள்தழைக்க தலைமையிடம்தான் வேண்டின்
அளித்திடுவேன் அந்தயிடம் தங்கைக்கின்று.

உனக்கென்று வாழ்த்தெழுத நினைக்கும்போது
.....

உடன்பிறப்பு...

உடன்பிறப்பில்லாமல் தவித்திருந்தேன்
உதயமானான் தம்பியவன் தனிமைபோக்க
இன்றைக்கு இருபத்திமூன்றண்டு முன்னாலே
இகம்வந்தான் இளையவன் ஜாண்றோஸ்.

பிறந்தநாள் இன்றவன் பிறந்தநாள்
வந்தநாள் புகழ் எமக்கு வந்தநாள்.

அவன் வளர்ந்தான் அறிவும் வளர்த்தான்
ஆற்றலுடன் அடக்கமும் செர்த்தேபெற்றான்
ஊமைத்துரை உற்றார் உறவினர்க்கு
தம்பித்துரை அவன் எனக்கென்றும்.

பொறுமைக்கு பாறையைவிட மேலாவான்
பொங்கியெழ அலைகடலைப்போலாவான்
அடம்பிடிப்பான் அழவேமாட்டான்
அமைதியுடன் தோன்றி நிர்ப்பான்.

தமிழ்க்கலையோடு காதலையும் போற்றிநிர்ப்பான்
தமைக்காத்து நடக்கவேணும் பெண்களென்பான்
தன்மானம் தமிழனுக்கு வேணுமெனபான்-அதை
தன்வாழ்வில் வளர்த்திடவே செயல்படுவான்.
1980

தனிப்பாசம்...

தனிப்பாசம் தருவதர்க்கோர்
தங்கை வேண்டும் என்றிருந்தேன்
பிறந்துவிட்டாள் தங்கையவள்
இருபதாண்டு முன் இதேநாளில்.

சிறந்த நாள் தங்கை பிறந்த நாள்
பறந்து வந்தது அந்த விருந்தநாள்!

மயங்கவைத்தாள் மழலைபேசி
தயங்கவைத்தாள் தமிழ்பேசி
விளங்கசெய்தாள் அன்பதென
வழங்க்செய்தாள் பாசமெல்லாம்.

வளர்ந்தனள் அவள் படர்ந்தனள்
வளர்மதிபோல் வான்முல்லைபோல்
களித்தனர் கண்டுகளித்தனர்-அவள்
அழகினை அனைவரும் கண்டுகளித்தனர்.

வளர்த்துவிட்டாள் என் கர்ப்பனையை
வளமிட்டாள் என் கவிதைக்கு
தூண்டிவிட்டாள் எம் கடமைகளை
துலங்கசெய்வாள் எம் குலப்பெயரை.
1980

தங்கைக்காக...

அண்ணன் எந்தன் கோயிலிலே
அணையாத தீபம் என் தங்கை
அந்த தீபத்தை ஏற்றிவைப்பேன்
எழிலுடனே விளங்கசெய்வேன்.

எனக்கென்று வாழவில்லை -என்
தங்கைக்காக வாழ்கின்றேன்
அவள் வாழ்வை வளமாக்க
கற்பனையில் மிதக்கின்றேன்.

கர்ப்பனையில் கண்டவைகள்-தங்கைக்கு
காரியமாய் நடக்க வேண்டும்
காலமெல்லாம் அதற்காக
கழிந்தாலும் கவலையில்லை.

வரன் பெற்று வளமும் பெற்று-அவள்
வாழ்வெல்லாம் களிக்க வேண்டும்
மக்கள் பெற்று மனம் நிறைந்து
மகராணியாய் விளங்கவேண்டும்.
1980

ஐம்பது வயது...

ஐம்பது வயதை அடைந்துவிட்டாய்
ஆயுளின் மறுபாதி தொடங்கிவிட்டாய்
இதுவரை காத்த இறைவனுக்கு நன்றி
இன்னும் காக்க வேண்டுவேன் உறுதி.

'இவன் தந்தை என்நோற்றான்' என்று
கேட்டனரோ இல்லையோ
இல்லை அவர் இன்று
நினைப்பாயா?

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்
ஈன்றவளை மகிழச்செய்யும்
சான்றோன் ஆகினாயா?

உனது பெற்றோருக்கு
இன்னும் இரு பிள்ளைகள்
இருப்பது தெரியுமா?

உறவுகள் இல்லாததுபோல்
உணர்ச்சிகள் இல்லாததுபோல்
ஊமைஎன இருந்துவிட்டாய்!

வாழ்க்கை துணை தேடி
பெற்றவரை பிரியலாம்
புறக்கணிக்கலாமா?

மக்கட்பேறு பெரும்பேறே
உன்னை பொறுத்தவரை
உன் பெற்றோருக்கு?

'தான் ஆடாவிட்டாலும்
தன் சதை ஆடும்' என்பர்.
உனக்கது நிகழ்ந்ததுண்டா?

மனைவி-மக்கள் சத்தியம்
இப்போது அதுவே முக்கியம்
அடுத்தபடியாவது தாய் கூடாதா?

புகுந்த வீட்டில் போன பின்னே
பிறந்த வீடு பிடிக்கவில்லையா?
பிறர் சிரிக்கவில்லையா?

உணர்ச்சிகளை காட்டவில்லைதான்
உறவுகளை பாராட்டவில்லைதான்
இப்படி பெட்டி பாம்பாகலாமா?

பயமா? யாரை? எதற்கு?
'கோழை நூறுமுறை சாகிறான்!'
இப்படியும் ஒரு வாழ்க்கையா?

இளமை சரிகின்றது
முதுமை எழுகின்றது
புதுமை முயலலாமே?

முன்பாதியில் தவறியவை
பின்பாதியில் சரிகட்டு
நன்மாதிரி காட்டு.

பிறந்த நாள் வாழ்த்துகிறேன்
சிறந்தோங்க வேண்டுகிறேன்
நீயும் நின்குடுமபமும் nநித்தம்!
2007

சானுக் கண்ணா...

சானுக்கண்ணா...
இப்படி உன்னை அழைக்க
எவ்வளவோ ஏங்கினேன்
அது ஏக்கமாகவே தொடரட்டும்...

உனக்கு நான் எழுதும்
முதர்க்கடிதம்/கவிதை இது!
அதுவும் உன் பிறந்த
நன்னாளையொட்டி.

இந்த நன்னாள் பொன்னாளாகட்டும்
உன் பிறப்பால் உலகமே சிறக்கட்டும்.

நீ அரும்பாகி, மொட்டாகி
மலராக மலர்ந்ததை
இன்னும் வளர்பிறைஎன
வளைந்து காயாகி நிற்பதை
தொலைவில் நின்று மட்டும்
பார்த்து பூரித்திருக்கிறேன்.

நீ இன்னும் கனிகொடுப்பதை
இந்த புவியே பார்த்து பூரிப்பதை
பார்க்க காத்திருக்கிறேன்
செபத்துடன் விழித்திருக்கிறேன்.

எண்ணிரண்டு பதினாறு
வயதாகும் வேளை உன்
எண்ணமெல்லாம்
மேலோங்கவேண்டும்
வண்ணமென நீ
திகழ வேண்டும்.
2007

Thursday 24 April 2008

காதலே...

காதலே...
என்னுடனேயே நீயிருக்கிறாய்
தெரியுமா உனக்கது?
இருந்தும் தவிக்கிறேன் உனைக்காண...
ஏன் தெரியுமா?
இரண்டல்லாத இந்த நிலை
போதாது, அது கூடாது கண்ணே...

நீ வேண்டும்
என்முன் நீ வேண்டும்
எனிலிருந்து உனைஎடுத்து
என்முன்னிறுத்தி
உனை நீயாக பார்க்க,
உன்னோடு பேச, பழக
ஏங்குகிறேன் கண்ணே...

காதங்கள் கண்டங்கள் தாண்டிய யான்
காதலே உனைமட்டும் தாண்ட முடியாது
தவிக்கிறேன் தனிமையில்.
அத்தநிமையிலும்
உன் நினைவுகள் இனிமைதர
தற்செயலாய் வந்தாயே
மின்னஞ்சலில் நிழர்ப்படமாய்!

அழகே...
உன்னை படமாக பார்த்த பின்னே
தவிக்கிறேன் நேர் காண!
இந்த தவிப்பே என் வாழ்விங்கே
தவிப்பை தணிக்க
வா நெஞ்சே, ஓடி வா இங்கே.
2007

நீயிருக்க...

நீயிருக்க என்னிதயம் நிம்மதியளிக்கும்
நீயின்றேல் அவ்விதயம் அமைதியிழக்கும்
நிலையில்லா கடல் போல ஆழமதடையும்
நீயின்றி ஆழம் கூட வெறுமைஎன்றிருக்கும்.

வெறுமையதே வேகமுள்ள புயலாய் மாறும்
வேறென்ன என் மனதின் நிலைஎன்றாகும்?
வேண்டாமிந்த வெறுமைநிலை என்னகத்தே
வேகமாக வரும் புயலை தடுத்திடவேணும்.

புயல் வேண்டாம், பூந்தென்றல் அதுவேபோதும்
பூங்காற்றாய் நீமட்டும் இருந்தால் போதும்
புவியெல்லாம் நீ வீச பூரிப்படையும் -வரும்
புகழெல்லாம் உன்னாலே புவியதை உணரும்.
1991

உன் சந்நிதியில்...

உன் சந்நிதியில் உவகை கொள்ளும் என்னிதயம்
உனைக்காண உருவில்லா துயரடையும்
உறவாலே நிறைவெய்தும் என்னுள்ளம்
உனையன்றி எந்நாளும் கலக்கம் கொள்ளும்.

நான் மட்டும் சரிபாதி, நீயன்றோ மறுபாதி
நாமிருவர் சேர்ந்தாலே நலன் கோடி.
நீயின்றி நான் தவிக்கவிடலாமோ?
நலமாக நீ வருவாய் எனை நாடி.

நிலவுமகள் வான்வெளியில் தவழ்ந்துவர
நீர்மகனும் அதைக்காண பொங்கியெழ
அதுபோல உன்வரவை எதிர்நோக்கும்
ஆண்மகனாம் என் நிலையை பாராயோ?

பார்வையொன்றே பரிசாக தந்தால் போதும்
பாவியிவன் பன்மடங்கு பூரிப்படைவேன்
பாவையுந்தன் பர்க்காட்டி சிரித்தால் போதும்
பரவசமாம் பரிசதென ஏற்றுக்கொள்வேன்.
1991

இருகோடுகள்...

இருகோடுகள் இணையாமல் சென்றால் தானே
இரயில் ஓடும் இருப்புப்பாதை அதுவென்றாகும்.
அதுபோல நாமிருவர் இணையாதிருந்தால்
அதுவன்றோ அழகுமிகு காதல் என்றாகும்.

இரயில் ஓட அக்தோடு என் மனமும் ஓட
இலட்சியமோ அடையாமல் நான் பாட
இலக்கியத்தில் காண்கின்ற காதல்கூட
இலட்சிய காதலரென நமைக்கொண்டாட...

இலக்கியமாய் நம் காதல் இன்னும் வளர
இதயத்தில் உனை நாளும் நானும் கொணர
இலக்கணமாய் காதலுக்கு நீ அமைய
இலட்சியக்காதல் அதுவென்றாகும்.
1991

வெறுமையாக இருந்த உள்ளம்...

வெறுமையாக இருந்த உள்ளம்
வெகுண்டெழுந்த தென்னவென்று
வெளியுலகோர் கேட்க நன்று
வெட்கி நின்றேன் நான் அன்று.

வேண்டாத உறவுகளும்
விபரீத சிந்தைகளும்
வேடிக்கையாக வந்து
வேதனையை தந்ததின்று.

வேடனவன் வலை போட்டு
வேட்டை மானை தேடுதல் போல்
வேகமுள்ள மனமின்று
வேறதையோ தேடுதின்று.

வேடமது கலைந்தபின்பு
வேறென்ன விளைவு வரும்
வேதனைகள் தொடர்ந்து வரும்
வேகம் கூட குறைந்து வரும்.
1991

நட்பை நாடி...

நட்பை நாடி நான் வந்தேன்-நல்
வாழ்த்தை கூறி உனை புகழ்ந்தேன்
நன்னிலம் சிறந்து நீயும் வாழ - நல்
நாயகன் இயேசுவை வேண்டி நின்றேன்.

நலம்நிறை எண்ணம் நச்செனக் கொண்டாய்
நன்றென செய்ததை தீதென கொண்டாய்
சிந்தயிர் தோன்றிய சீரான நினைவை
சீர்கெட்டதென்று சீற்றம் கொண்டாய்.

சிலவேளை நீயே இப்படியாக -என்
சிந்தையும் கலக்கம் கொள்வதை பாராய்
உள்ளத்தை புரியாதுணர்வை இழக்கும்
உனக்கென கூற எனக்கென உண்டு.
1991

இதய வீணை...

தூசு படிந்த என் இதய வீணையை
துடைக்க வந்தவள் நீ
துருப்பிடித்த அதன் நரம்புகளை
துலங்க வைத்தவள் நீ.
தூங்கிக்கிடந்த என் இதய ராகத்தை
துயிலெழ செய்தவளும் நீயே!

துறவுக்காக உறவை முறித்த என்னை
உறவைச்சொல்லி துறவை துரத்திட
தூண்டுபவளும் நீயன்றோ?

மணமதை துறந்தேன் -என்
மனமதை நிறைத்தேன்
மன்னவன் தனது மாசுறு மொழியால்
மாதே உந்தன் மயக்கும் விழியால்...

மயங்கிய மனதின் மருந்தென நீயும்
மறுபடி வந்தெனை உணர்த்திவிடு
மணமதை தந்து மகிழ்வுற செய்யும்
மலர்போல் உன்னை தந்துவிடு.
1991

இதைய வீணை...

அன்றொருநாள்...

அன்றொருநாள் பெண்ணொருத்தி
ஆட்கொள்ள ஆசைப்பட்டாள்
இயலவில்லை இன்றுவரை
ஈங்கிதோ நீயொருத்தி
உனையளித்து உறவுகொள்ள
ஊடலுடன் முனைகின்றாய்!
என்பொருட்டு ஏங்கும் நீ
ஏமாற்றம் அடைவாயோ?
ஐயமுற கேட்க்கின்றேன்
ஒருவேளை உனை நாடி
ஓடோடி வந்தாலும

முல்லைமலர் பல் காட்டி...

முல்லைமலர் பல் காட்டி- நீ
முகமலர்ந்து சிரித்திடவே
முத்துக்கள் சிதறுவதாய்-தவ
முனிவர்கூட நினைப்பனரே.

முகம்நிறைய கௌரவமாய்-நீ
முறையின்றி போவதென்ன?
முன்கோபம் போல் காட்டி -நீ
மூடி மறைப்பதென்ன?

'சாவைவிட வலுவாமே காதலென்று'
'சங்கீர்த்தனம்'கூட சாற்றும்போது
சாதாரண பெண்ணொருத்தி
சாதிக்க முயல்வதென்ன?

சாவுக்கே சவால் விடும் காதலுக்கு
சரிநிகராய் நீயிருக்க விருப்பமெனில்
சாகசங்கள் புரியவேண்டும் -இன்னும்
சாபம்கூட ஏற்க்கவேண்டும்
1991

கடிதம்போல்...

கடிதம்போல் வந்ததென்ன?
கவனத்தை கவர்ந்ததென்ன?
காதல்கொண்ட கள்ள உள்ளம்
கலையுள்ள கருணை உள்ளம்.

கவிதையன்று பாடிவிட்டேன்
கருத்தறிய காத்திருந்தேன்
கருத்தெனவே கடிதமொன்று
கண்டபோதோ கலங்கிநின்றேன்.

கடவுள் பற்றை பக்தி என்பர்
காதற்ப் பற்றோ காமமென்பர்
காதற்பற்றும் கடவுள்பற்றென
கண்டதனால் காதல் கொண்டேன்.

என் போன்ற ஒருவனுக்கு
என் இந்த காதல் இன்பம்?
காதல் கொண்ட நீ இந்த
கருத்தினையே ஏர்ப்பாயா?
1991

உனக்கு மட்டும்...

கண்டதும் காதல்கொண்ட எனை - உன்
கண்களும் காந்தமாக கவர்ந்திடவே
கவிதையொன்று பாடி உனை - என்
காதல் மனம் காட்ட வந்தேன்.

உனைக்காண உதவிபல கேட்டுவந்தேன்
கேட்டவற்றை கேட்டபடி தந்துவந்தாய்
உதவிக்கு உளம் மகிழ்ந்து நன்றிசொல்ல
உனக்கென்று கவிதையொன்று பாடவந்தேன்.

உன் கண்ணிருக்க கவிதையெல்லாம் வீணே
நீயருகிருக்க கலையழகொன்றும் காணேன்
உன் குரலென்றும் இசைபோன்ற பண்ணே
நீ நடந்துவர நடனம் கூட பாரேன்.

இப்படியும் இன்ப நிலை எயதிடவே - என்
இதயமது இனியுன்னை கெஞ்சும்
இந்நிலைக்கு எனைக்கொணர்ந்த தேவி
இவ்வுதவி தந்தெனக்கு அருள்புரிக கொஞ்சம்.

காவியங்கள் பல்வேறு பாடக்கேட்டேன் -இன்னும்
ஓவியங்கள் வண்ண வண்ண எழிலில் கண்டேன்
என்றிருந்தும் உனைப்போன்ற காவியமோ ஓவியமோ
எங்கணுமே கேட்டதில்லை கண்டதில்லை கண்ணே.

நீ சிரித்தால் முத்துதிர பார்ப்பேன்
நீ சினந்தால் சத்துதிர உணர்வேன்
நீ மொழிந்தால் இனிப்பதென சுவைப்பேன்
நீ இழந்தால் கசப்பதென அறிவேன்.

நீ வாழ நித்தமும் யான் வேண்டுகிறேன்
நிலையான புகழ் உனக்கு வாழ்த்துகிறேன்
நீங்காத இன்பம் நிழல்போல தொடர
நிகரில்லா தலைவனையே வேண்டுகிறேன்.
1991

அந்திப்பொழுது ஆனபின்...

அந்திப் பொழுது ஆனபின் அன்று
அலைகடல் மேலே 'அருணா'வினின்று
ஆங்கே தொலைவிலுள்ளது 'கொர்லை'என்று
ஆதவன் மறைய படகினில் சென்றோம்.

படகினில் நண்பர் நால்வருடனே
பாதைகளில்லா கடல் பரப்பினிலே
பயணமானோம் பதட்டத்துடனே
பாட்டும் வந்தது பாவையுன்னாலே.

பகலவன் பயணம் முடிக்கும் வேளை
பறவையினங்கள் பார்ப்பிடம் தேடி
பறந்து வருவதும் பார்த்து நின்றோமே
பாவை நீயிதை பார்த்திடுவாயோ?

புள்ளினம் ஒன்று புதுப்பாடல் பாடி
பூவையுந்தன் தூதினை கொணர்ந்தது
புள்ளினம் தந்த தூதினை ஏற்று
புதுக் கவிதை ஒன்று புனைந்தேன் உனக்கு.

என் கவிதை கொணர ஆளிலைஎன்று
ஏங்கி நான் நின்று தவித்திடும் வேளை
எங்கிருந்தோ ஒரு தென்றல் வந்து
என் கவிதை தனையே எடுத்து சென்றது.

கடல்வழி அந்த காற்றும் சென்றது
கவிதை தவறி கடலில் விழுந்தது
கவிதை கடலில் கரைந்து ஒன்றானது
கண்மணி நீயிதை அறிவாயோ?

அதேக்கடல் அரபிக்கடல்தான்
அங்கே நமது ஊரிலும் உள்ளது
அலையுடன் அந்த கவிதையும் வந்தது
அன்பே நீயதை பெற்றுக்கொண்டாய?