Friday 25 September 2009

கடலின் கீதம்...

இசை நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. மூங்கிலினூடே காற்று கடந்து செல்லும்போது இனிமையான இசை எழும்புவதைப்போன்று, சரியான சந்தர்ப்பங்கள் அமைந்துவிட்டால் நம் ஒவ்வொருவருக்கும் இசைக்க முடியும், பாட முடியும். அதற்க்கு சரியான ஒரு எடுத்துக்காட்டுத்தான் எங்களது அப்பா அருளப்பன், 'பாகவதர்' என்று அன்புடன், ஆதரவுடன் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.
இதுவே கடற்கரையில் நடந்தபோது, அதை அற்புதம் என்றல்லாமல் வேறு என்ன சொல்வது? அவரது சின்ன வயதில் ஆழூர் முத்தையா பாகவதர் எனும் சங்கீத வித்வான் கிராமங்களில் உள்ள சிறுவர்கள்கூட, ஏன் கடற்கரையில் உள்ளவர்க்களும்கூட, இசை பயில தன்னால் ஆனா உதிவிகளை செய்ய முன் வந்திருக்கிறார். இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் இசை பயின்றார், பாகவதரானார், நாடகம் மற்றும் சங்கீத கச்சேரிகளிலும் அவருக்கு நிறையவே கிராக்கி ஏற்ப்பட்டது. அப்படித்தான் இரணியல் கலைத்தோழனுடைய நாடக குழுவிலும், பிறகு மதுரை போன்ற இடங்களிலுள்ள கம்பனிகளிலும் அவருக்கு வாய்ப்புக்கள் கிடைத்தது. ஆனால் அவரது தாயார் அவரை நாடக கம்பனியிலிருந்து கட்டாயமாக வீட்டுக்கு கொண்டுவந்தார். கலைத்தோழனுடைய 'ஜோடிப்புறாக்கள்' எனும் நாடகமும் அதில் 'நாடகமெல்லாம் கண்டேன்...' எனும் பாடலும் இன்னும் என் மனத்திரையில் வந்துபோகிறது.
இவ்வாறு யாருக்கும், குறிப்பாக பின் தலைமுறைகளுக்கு இவரது இசையிலுள்ள ஈடுபாடும் இனிமையாக பாடும் திறமையும், தெரியாமல் போகக்கூடாது என்பதற்காகத்தான் புனித யூதா கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் ஒரு இசைப்போட்டியும், இந்த வருடம், அக்டோபர் மாதம் நாலாம் தேதி திருவனந்தபுரம் நிஷாகந்தி அரங்கில் திரு மோசஸ் பிர்ணண்டேஸ்வழங்கும் இன்னிசை விழாவில் அவர் கௌரவிக்கும் வயதான நூறு இசைக்கலைஞர்களுக்கு இவர் பெயரில் ஒரு நினைவு பரிசளிக்க எனது தங்கை குடும்பத்தின் சார்பில் முன் வந்துள்ளோம். அவரது இசை பற்று நமது இளைய தலைமுறைக்கு, குறிப்பாக கடலோர மீனவ இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதுடன் அவர்களை 'இசைபட' வாழ தூண்டவேண்டும். அவரது நினைவு நிலைக்கட்டும், இசை வானுயர வளரட்டும், இனிமை நிறையட்டும்.